;
Athirady Tamil News

தென் கொரியா காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு! 27,000 பேர் வெளியேற்றம்!

0

தென் கொரியா நாட்டில் பரவிய காட்டுத் தீயினால் பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

தென் கொரியா நாட்டின் தெற்குப் பகுதிகளில் நிலவும் வறண்ட வானிலையாலும் மற்றும் வீசும் பலத்த காற்றினாலும் தொடர்ந்து பரவும் காட்டுத் தீயினால் பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில் அன்டோங் நகரம் மற்றும் பிற தென்கிழக்கு நகரங்களில் உள்ள சுமார் 27,000 பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், 9,000 தீயணைப்பு வீரர்கள், 130-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு தொடர்ந்து பரவும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 26 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய தீயணைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தென் கொரியாவின் உய்சோங் நகரத்த்தின் சியோங்சாங் கவுன்டியிலுள்ள ஒரு சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 2,600 கைதிகளை இடமாற்றும் பணியை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டிருந்தனர்.

மேலும், உய்சோங் மலைப்பகுதியில் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி அதன் விமானி பலியானதாக தீயணைப்பு அதிகாரிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.