பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் தற்கொலை!

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மீனவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர் கௌரவ் ராம் ஆனந்த் (52) கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் கராச்சி சிறையில் 3 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் இவர் நேற்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. சிறையில் உடன் இருக்கும் நண்பர் வெளியே சென்ற நேரத்தில் நள்ளிரவில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக சிறை அதிகாரி தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன் குஜராத்தைச் சேர்ந்த பாபு பாய் சுடாசாமா என்ற மீனவர் பாகிஸ்தான் சிறையில் தண்டனைக் காலம் முடிந்து அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உடல்நலக் கோளாறால் பலியானார்.
இதுபோல, இந்திய மீனவர்கள் பலர் பாகிஸ்தான் சிறையில் பலியாகும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது.
இந்திய அரசு கொடுத்த தகவலின்படி, கடந்த டிசம்பர் 31, 2024 வரை பாகிஸ்தான் சிறையில் 144 இந்திய மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,173 படகுகள் அவர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள. இதில் குஜராத் மீனவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
தெளிவாக வரையறுக்கப்பட்ட கடல் எல்லைகள் இல்லாதது, நவீன வழிகாட்டும் கருவிகளின் போதாமை, தவறுதலாக எல்லை தாண்டிச் செல்வது உள்ளிட்ட காரணங்களால் மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.