கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட 2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் காலாண்டுக்கான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(28) நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையின் கீழ் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன், அவை தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன. அதனோடு இணைந்ததாக புதிய ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களுக்கான முன்மொழிவுகளுக்கான அனுமதிகளும் பெறப்பட்டன.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த விசேட திட்டங்களை வகுத்தல் தொடர்பாகவும் உடனடி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
மேலும் கடந்த ஆண்டில் தீர்மானங்கள் எட்டப்பட்ட விடயங்களின் முன்னேற்ற தன்மையும் குறித்தும் ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் யாழ் – கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன்,ஜெ.ரஜீவன்,இராமநாதன் அர்ச்சுனா,சிவஞானம் சிறீதரன், மற்றும்,வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள், கிளைத்தலைவர்கள், உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.