;
Athirady Tamil News

இலங்கையில் மற்றுமொரு சம்பவம்; வைத்தியசாலை வளாகத்தில் பல் மருத்துவ நிபுணர் மீது தாக்குதல்

0

கேகாலை போதனா வைத்தியசாலையில் பல் மற்றும் முகத்தாடை அறுவை சிகிச்சை நிபுணர் நேற்றையதினம் (28) வைத்தியசாலை வளாகத்தில் கொடூரமாக தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைத்தியசாலை வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, நிபுணத்துவ மருத்துவர் எதிர்பாராத விதமாக கர்ப்பிணி பெண்ணின் மீது மோதியதாகவும், அதனால் அந்த பெண் சிரமப்பட்டதாகவும் கூறியே நபர் ஒருவர் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

கேகாலை மாவட்டத்தில் அடையாள வேலை நிறுத்தம்
சம்பவத்தையடுத்து, சுகாதார ஊழியர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில் அரசாங்க பல் மருத்துவர்கள் சங்கம் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளது. இதற்கு பதிலடியாக, அரசாங்க பல் மருத்துவர்கள் சங்கத்தின் நிர்வாக குழு இன்று (29) நண்பகல் வரை கேகாலை மாவட்டத்தில் அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

மருத்துவ நிபுணர்கள் எதிர்கொள்ளும் அதிகரித்து வரும் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு உடனடி அரசாங்க தலையீட்டை நிபுணத்துவ மருத்துவர்கள் சங்கம் கோருகிறது.

அத்துடன் சுகாதார ஊழியர்களுக்கு எதிரான வன்முறையை முழுமையாக ஒழிக்கும் கொள்கையை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.