;
Athirady Tamil News

மனைவி மீது சந்தேகம்; பச்சிளம் குழந்தையை கொன்ற தந்தை

0

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் இரண்டரை வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூரத் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, மண்ணடி லிங்கி செட்டி தெரு பகுதியில் அக்ரம் ஜாவித் என்பவர் தனது மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தையுடன் வசித்து வந்த நிலையில், தொடர்ச்சியாக கணவனுக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சந்தேகத்தின் அடிப்படையில் கொலை
இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அதிகாலை குழந்தை மூச்சு திணறி இறந்துவிட்டதாக குடும்ப உறுப்பினர்களை ஜாவித் நம்ப வைத்து நாடகமாடியுள்ளார். இதனையடுத்து சந்தேகம் அடைந்த மனைவியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், பிரேத பரிசோதனையில் குழந்தையின் கழுத்து நெரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக குழந்தையை அவ்வப்போது அடித்து துன்புறுத்துவதும், தாய் இல்லாத நேரத்தில் குழந்தைக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டுள்ளதாகவும் ஜாவித் பொலிஸாரின் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் மூலம் பெண் குழந்தை கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. ஜாவித்தின் மனைவிக்கு ஏற்கனவே ஒரு ஆண் நண்பர் இருப்பதாகவும் தாங்கள் இருவரும் கருப்பாக இருக்கும் பட்சத்தில் குழந்தை மட்டும் எப்படி சிவப்பாக பிறந்தது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குழந்தையை கொன்றதாக ஜாவித் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் பெண் குழந்தையை படுகொலை செய்த அக்ரம் ஜாவித்தை பொலிஸார் கைது செய்து விசாரணை முடித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

அதற்கமைய, ஜாவித்தை எதிர்வரும் 10ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.