;
Athirady Tamil News

பாகிஸ்தான்: ரமலான் விடுமுறையினால் அகதிகளை நாடு கடத்துவதில் தாமதம்!

0

பாகிஸ்தானில் ரமலான் விடுமுறையினால் லட்சக்கணக்கான ஆப்கன் அகதிகள் நாடு கடத்தப்படுவதற்கான காலக்கெடுவானது தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் தஞ்சமடைந்துள்ள லட்சக்கணக்கான ஆப்கன் அகதிகளுக்கு அந்நாட்டு அரசு ஆப்கன் குடியுரிமை அட்டை எனும் ஆவணத்தை வழங்கியிருந்தது. இந்த ஆவணத்தை சுமார் 8 லட்சம் ஆப்கன் அகதிகள் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டிருந்த நிலையில் கடந்த மார்ச் 31-க்குள் பாகிஸ்தானிலுள்ள ஆப்கன் மக்கள் தங்களது தாயகத்திற்கு திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தானில் தற்போது ரமலான் பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதினால், அந்நாட்டிலுள்ள ஆப்கன் அகதிகளை நாடு கடத்த விடுக்கப்பட்டிருந்த காலக்கெடுவானது அடுத்த வாரத்தின் துவக்கம் வரையில் நீட்டிக்கப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையம் வழங்கப்பட்ட பதிவு செய்த ஆவணங்கள் உடைய ஆப்கன் அகதிகள் பாகிஸ்தானின் இஸ்லாமபாத் மற்றும் ராவல்பிண்டி ஆகிய நகரங்களை விட்டு வெளியேற்றப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, ஐக்கிய நாடுகளின் கணக்குப்படி சுமார் 30 லட்சம் ஆப்கன் மக்கள் பாகிஸ்தானில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த எண்ணிக்கையானது கடந்த 2021 ஆம் ஆண்டு தலிபான் அரசு அமைந்ததிலிருந்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்துடன், ஆப்கன் அகதிகளை வலுக்கட்டாயமாக மனிதாபிமானமற்ற முறையில் பாகிஸ்தான் நாடு கடத்துவதற்கு பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.