;
Athirady Tamil News

சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! 9 பேர் பலி!

0

சிரியா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியாவின் தென்மேற்கு பகுதிகளின் மீது நேற்று முன்தினம் (ஏப்.2) இரவு இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் அனைவரும் அப்பகுதியில் வசித்த சாதாரண மக்கள் என்று சிரியா அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், பலியானவர்களைப் பற்றிய முழுமையானத் தகவல்கள் தெரிவிக்கப்படாத நிலையில் அவர்கள் அனைவரும் தாரா மாகாணத்தைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய உள்ளூர்வாசிகள் என பிரிட்டனைச் சேர்ந்த போர் கண்காணிப்பு ஆணையம் கூறியுள்ளது.

இதனிடையே, சிரியாவின் இடைக்கால அதிபர் அஹ்மத் அல்-ஷராவுடன் துருக்கி அரசு கூட்டமைத்து அந்நாட்டின் ஹமா நகரத்தை முக்கிய ராணுவத் தளமாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், சிரியாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக மாற்ற துருக்கி முயற்சித்து வருவதாக இஸ்ரேல் அரசு குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேலின் வெளியுறவுத் துறை அமைச்சர் கிடியோன் சார் கூறுகையில், சிரியாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக உருமாற்ற துருக்கி முயன்று வருவதாகவும், சிரியா ஈரான் அல்லது துருக்கியின் பிரதிநிதியாக இருப்பது நல்லது இல்லை எனக் கூறியுள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு துருக்கி அதிகாரிகள் தரப்பிலிருந்து தற்போது வரை எந்தவொரு பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, சிரியாவின் முன்னாள் அதிபர் அசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு இடைக்கால அரசு அமைந்ததிலிருந்து, அந்நாட்டின் தென் மேற்கு பகுதிகளை தங்களது பாதுகாப்பிற்காக இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றி பாதுகாப்பு மண்டலமாக உருவாக்கியுள்ளது.

மேலும், கடந்த மார்ச் மாதம் அம்மாகாணத்தின் கொவாயா கிராமத்தின் விவசாய நிலங்களின் வழியாகக் கடக்க முயன்ற இஸ்ரேல் ராணுவத்துக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.