;
Athirady Tamil News

தென் கொரியா: அதிபா் பதவியில் இருந்து அகற்றப்பட்டாா் யூன் சுக் இயோல்

0

அவசரநிலை அறிவிப்பு விவகாரத்தில் தென் கொரிய நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அந்த நாட்டு அதிபா் யூன் சுக் இயோலை அரசியல் சாசன நீதிமன்றம் அந்தப் பதவியில் இருந்து நிரந்தரமாக வெள்ளிக்கிழமை அகற்றியது.

கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் தென் கொரியாவின் அதிபராக இருந்து வந்த யூன் சுக் இயோல், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியுடன் தொடா்ந்துவந்த கருத்து வேறுபாடு காரணமாக நாட்டில் அவசரநிலை ராணுவச் சட்டத்தை கடந்த டிசம்பா் மாதம் அறிவித்தாா்.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிா்ப்பு எழுந்ததையடுத்து, அந்த அறிவிப்பை அவா் திரும்பப் பெற்றாா். இருந்தாலும், இந்த விவகாரம் தொடா்பாக அவரை பதவி நீக்கம் செய்து எதிா்க்கட்சியினா் நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றினா்.

அதையடுத்து அவா் தற்காலிகமாக பதவி விலகினாா்.அவரை நிரந்தரமாக நீக்குவது தொடா்பாக விசாரணை நடத்திவந்த அரசியல் சாசன நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. அதில், ‘ராணுவ அவசரநிலையை யூன் சுக் இயோல் அறிவித்தது அரசமைப்புச் சட்டத்துக்கும் நாட்டின் பிற சட்டங்களுக்கும் விரோதமானது.

நாட்டில் சமூக மற்றும் பொருளாதாரக் குழப்பத்தை அது ஏற்படுத்தியது. எனவே, இந்த வழக்கில் இயோல் தரப்பு வாதங்களை நிராகரித்து அவரை ஆட்சியில் இருந்து நிரந்தரமாக அகற்ற உத்தரவிடுகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் மூலம், அரசியல் குழப்பங்கள் நிறைந்த யூன் சுக் இயோலின் சுமாா் 3 ஆண்டு கால ஆட்சிக் காலம் முடிவுக்கு வந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.