ரூ.15 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட தலிபான் தலைவர் உள்பட 2 பேர் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் தலிபான்களின் முக்கிய தலைவர் உள்பட 2 தீவிரவாதிகளை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
கைபர் பக்துன்குவா மாகாணத்தின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தீர் மாவட்டத்தில் தெஹ்ரீக்-எ-தலிபான் அமைப்பைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் உள்ளதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரைகளை விரட்டி சென்றுள்ளனர். அப்போது, அதில் பயணம் செய்த இருவரும் தீவிரவாதிகள் என உறுதியானதினால் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்ட நிலையில் அதில் ஒருவர் தலிபான் அமைப்பின் முக்கிய தலைவரும் தேடப்பட்டு வந்த தீவிரவாதியுமான கொச்வான் (எ) ஹஃபீஸுல்லா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொல்லப்பட்ட மற்றொருவரை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, அந்த பகுதி முழுவதும் முடக்கிய பாதுகாப்புப் படையினர் அங்கு வேறு தீவிரவாதிகள் யாரேனும் பதுங்கியுள்ளனரா என்று தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, கணிணி அறிவியல் பட்டதாரியான ஹஃபீஸுல்லா தீர் மாவட்டத்தின் கோஹான் கிராமத்தைச் சேர்ந்தவர். ஜெய்ஷ்-எ-முஹம்மது எனும் பயங்கரவாத அமைப்பில் பணியாற்றிய அவர் அதன் பின்னர் தலிபான் அமைப்பில் இணைந்து கொண்டார்.
இந்நிலையில், தலிபான் அமைப்பின் மூலம் மர்தான் மாகாணத்தின் நிழல் உலக ஆளுநராக பணியாற்றிய அவர் கடந்த 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து ஏராளமான தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தியுள்ளார்.
மேலும், இவரைப் பிடிக்க பாகிஸ்தான் அரசு சுமார் 50 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் அளவிலான பணத்தை (இந்திய பணமதிப்பில் ரூ.15.3 லட்சம்) வெகுமதியாக அறிவித்து தேடி வந்oதது குறிப்பிடத்தக்கது.