17 ஆண்டுகள் கழித்து ஜப்பானில் மீண்டும் பரவும் குதிரைக்காய்ச்சல்!

ஜப்பான் நாட்டில் 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் குதிரைக்காய்ச்சல் பரவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்திலுள்ள 3 குதிரை வளர்ப்புப் பண்ணைகளிலுள்ள குதிரைகளுக்கு ஈகுவைன் இன்புளூவன்சா எனும் கொடிய வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அங்குள்ள குதிரைகளை தனிமைப்படுத்தி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதுடன், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இந்த ஈகுவைன் இன்புளூவன்சா எனும் நோயானது மிகப் பெரியளவில் குழுக்களாக வளர்க்கப்படும் 1 முதல் 5 வயதுடைய குதிரைகள், கழுதைகள் உள்ளிட்ட விலங்குகளை பாதிக்கும் சுவாசக் கோளாறு நோய் எனக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட குதிரையின் சுவாசக் காற்றின் மூலமாகவும் மற்ற குதிரைகளுக்கு இந்த வைரஸ் பரவும் எனவும் சுமார் 7-10 நாள்கள் வரை அதன் பாதிப்பைத் தொடரும் எனவும் கூறப்படுகிறது. கடந்த 2008-ம் ஆண்டுக்கு பின் சுமார் 17 ஆண்டுகள் கழித்து ஜப்பானில் இந்தப் பாதிப்பானது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2007-ம் ஆண்டு சீனா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட இந்தக் காய்ச்சலினால் லட்சக்கணக்கான குதிரைகள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.