;
Athirady Tamil News

சூடானில் துணை ராணுவப்படையின் தாக்குதலில் 10 குழந்தைகள் உள்பட 32 பேர் பலி!

0

சூடான் நாட்டில் துணை ராணுவப்படையினர் நடத்திய தாக்குதலில் 32 பேர் பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு தர்ஃபூர் மாநிலத்தின் தலைநகர் எல்-ஃபாஷரில் நேற்று (ஏப்.11) ராபிட் சப்போர்ட் ஃபோர்ஸஸ் எனும் துணை ராணுவப்படை நடத்திய டிரோன்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் அப்பகுதிவாசிகள் 32 பேர் கொல்லப்பட்டதாக சூடான் நாட்டு ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்டது. இதில், 4 பெண்கள், 10 குழந்தைகள் கொல்லப்பட்டதுடன், 17-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, எல்-ஃபஷர் நகரத்தின் அருகிலுள்ள ஜம்ஜம் நிவாரண முகாமின் மீதும் துணை ராணுவப்படைகள் பீரங்கித் தாக்குதல் நடத்தியதாக சூடானின் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதல்களினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து, வடக்கு தர்ஃபூரின் சுகாதாரத் துறை அமைச்சர் இப்ராஹிம் காதிர் கூறுகையில், ஜம்ஜம் முகாமானது நகரத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பதாலும் தகவல் பரிமாறும் வசதிகளிலுள்ள குறைபாட்டினாலும் அங்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தெளிவானத் தகவல்கள் கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, 2 ஆண்டுகளாக சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட ஏராளமான மக்கள் ஜம்ஜம் முகாமில் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜம்ஜம் முகாமின் மீது துணை ராணுவப்படை நடத்திய தாக்குதலில் அங்கு வசித்த குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என 25-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.