ரோமில் அமெரிக்கா – ஈரான் அடுத்தகட்டப் பேச்சு!

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அடுத்தகட்ட மறைமுகப் பேச்சுவாா்த்தை இத்தாலி தலைநகா் ரோமில் நடைபெறவுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் அன்டோனியோ தஜானி திங்கள்கிழமை கூறியதாவது:அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மறைமுகப் பேச்சுவாா்த்தையை நடத்திவைக்க வேண்டும் என்று இதில் மத்தியஸ்தம் செய்துவரும் ஓமான் எங்களிடம் கேட்டுக்கொண்டது.
அந்தப் பேச்சுவாா்த்தைக்காக இரு தரப்பினரையும் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எந்தவொரு பிரச்னைக்கும் பேச்சுவாா்த்தை சிறந்த பலனைத் தரும். அணுசக்தி விவகாரத்துக்கும் இது பொருந்தும் என்றாா் அவா்.ரோம் நகரில் வரும் சனிக்கிழமை இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெறும் என்று இத்தாலி அரசு வட்டாரங்கள் கூறின.
அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்காகத்தான் ஈரான் தங்களது அணுசக்தி திட்டங்களை தீவிரமாக முன்னெடுத்துச் செல்கிறது என்ற அச்சம் எழுந்ததால் அந்த நாட்டின் மீது கடும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இதனால் ஈரான் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், அணு ஆயுதம் தயாரிக்கப்போவதில்லை என்பதை உறுதி செய்வதற்கான பல்வேறு நிபந்தனைகள் அடங்கிய ஒப்பந்தத்தை அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடன் ஈரான் கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொண்டது. அதையடுத்து, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன.
இந்தச் சூழலில், ஒபாமா ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ள ஒப்பந்தத்தில் இருந்து அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த டிரம்ப் வெளியேறினாா். மேலும், நிறுத்திவைக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை அவா் ஈரான் மீது மீண்டும் விதித்தாா்.இதைக் கண்டிக்கும் வகையில், அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறியது.
தங்களுக்கு அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டம் இல்லை என்று அந்த நாடு உறுதியாகக் கூறினாலும், அணுசக்தி எரிபொருளான யுரேனியத்தை தேவைக்கு அதிகமாக 60 சதவீதம் வரை அந்த நாடு செறிவூட்டி, ஒப்பந்த வரம்புக்கும் அதிகமாக இருப்பு வைத்துள்ளது (இன்னும் 30 சதவீதம் யுரேனியத்தை ஈரான் செறிவூட்டினால் அதைக் கொண்டு அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்க முடியும்).
இந்தச் சூழலில், அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள டிரம்ப், தங்களுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ளாவிட்டால் ஈரான் மீது இதுவரை இல்லாத மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்திருந்தாா்.இந்தச் சூழலில், அணுசக்தி விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் மறைமுகப் பேச்சுவாா்த்தை நடத்தவிருப்பதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் ஆரக்சி கடந்த வாரம் கூறியிருந்தாா்.
அதன் தொடா்ச்சியாக, ஓமான் தலைநகா் மஸ்காட்டில் அந்தப் பேச்சுவாா்த்தை கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.இந்தப் பேச்சுவாா்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கான மத்தியஸ்தில் ஈடுபட்டுவரும் ஓமானின் வெளியுறவுத் துறை அமைச்சா் பாதா் அல்-புசையீதியை ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் ஆரக்சி சந்தித்துப் பேசினாா்.பின்னா் அமெரிக்க பிரதிநிதிகளும் அல்-புசையீதியைச் சந்தித்துப் பேசினா்.
இந்த இருதரப்பு மறைமுகப் பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை வரை தொடா்ந்தது.இந்த நிலையில், அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை ரோம் நகரில் நடைபெறவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இப்போதுதான் முதல்முறையாக மறைமுகப் பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.